11.005 திருக்கோயில் திருவெண்பா சேத்திரத் ( ) |
Back to Top
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
11.005  
திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர்.
| [1] |
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
| [2] |
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி, நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை.
| [3] |
காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய் நாளும் அணுகி நலியாமுன் பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க் கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
| [4] |
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக் குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.
| [5] |
காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர் பருக்கோடி மூடிப் பலரழா முன்னம் திருக்கோடி காஅடைநீ சென்று.
| [6] |
மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த் தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம் நின்னிடைவாய் வைத்து நினை.
| [7] |
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை.
| [8] |
அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற் குழித்தண் டலையானைக் கூறு.
| [9] |
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும்.
| [10] |
குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும் என்னானைக் காவா இதுதகா தென்னாமுன் தென்னானைக் காஅடைநீ சென்று.
| [11] |
குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல் பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத் திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யங்காந் திளைத்து.
| [12] |
காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும் பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள் ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை மாகாளங் கைதொழுது வாழ்த்து.
| [13] |
இல்லும் பொருளும் இருந்த மனையளவே சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
| [14] |
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச் சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
| [15] |
இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச் சட்டவொரு முட்டைநெய் தான்கலந் தட்ட அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில் திருவாச்சி ராமமே சேர்.
| [16] |
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்.
| [17] |
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை.
| [18] |
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின் தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும் தன்திருவாய்ப் பாடியான் தாள்.
| [19] |
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன் கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய் மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி ஏகம்பத் தானை இறைஞ்சு.
| [20] |
கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர் மரமூன்றி வாய்குதட்டா முன்னம் புரம்மூன்றுந் தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து.
| [21] |
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட் டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் நஞ்சங் கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி இரந்துண் டிருக்கப் பெறின்.
| [22] |
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம் விழையாதே கூற்றுதைத்தான் ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன் பாடரவம் கேட்ட பகல்.
| [23] |
உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார் கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே செழுந்திரும யானமே சேர்.
| [24] |